விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு காவல் துறையினர் விதித்துள்ள கட்டுப்பாடுகளை கண்டித்து புதன்கிழமை கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட இந்து முன்னணி பொதுச் செயலர் பெ. சக்திவேலன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நிகழாண்டு அரசு உத்தரவின்பேரில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கு 24 வகையான கடுமையான கட்டுப்பாடுகளை காவல்துறையினர் விதித்துள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்து சென்னை சேப்பாக்கத்தில் இந்து முன்னணி மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
இதற்கிடையே, காவல் துறையினரின் நடவடிக்கையை கண்டித்து நாசரேத், சாத்தான்குளம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இந்து முன்னணியினர் விநாயகர் சதுர்த்தி விழா தொடக்க நிகழ்ச்சிகளில் மாவட்ட பொதுச் செயலர் பெ. சக்திவேலன் தலைமையில் கருப்பு பேட்ஜ் அணிந்து கலந்துகொண்டனர்.
இதுகுறித்து சக்திவேலன் கூறியது: தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடைபெற்றதுபோல் விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் நடைபெறும்.
காவல்துறையினரின் கட்டுப்பாடுகளை கண்டித்தும், அதை நீக்கி முறையாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதிக்க வலியுறுத்தியும் இப்பகுதியில் புதன்கிழமை (செப். 12) கருப்புக் கொடி ஏந்தி பல்வேறு இடங்களில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம் என்றார் அவர்.