அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் எங்களை தொடர்புகொள்ளவில்லை என்றார் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாஹ்.
திருச்செந்தூரில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி:
மக்களவைத் தேர்தலில் போட்டியிட திமுக எங்களுக்கு இடம் ஒதுக்கவில்லை என்பதால், நாங்கள் அமமுகவை அணுகியதாக அக்கட்சியின் துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன் கூறிவருகிறார். எங்களை அவர்களோ, அவர்களை நாங்களோ தொடர்புகொள்ளவில்லை. எங்களுடைய பிரசாரம் திமுக கூட்டணிக்கு பெரும் ஆதரவை பெற்றுத் தருகிறது. குறிப்பாக, சிறுபான்மை மக்களின் ஒட்டுமொத்த ஆதரவும் திமுக தலைமையிலான கூட்டணிக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
40 மக்களவைத் தொகுதிகள், 18 சட்டப்பேரவைத் தொகுதிகள், அதைத் தொடர்ந்து வரும் 4 பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும். மத்தியில் ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சியும், தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சியும் அமையும். ஸ்டெர்லைட் ஆலையை பராமரிக்க அந்நிறுவனம் அனுமதி கேட்டநிலையில், உச்ச நீதிமன்றம் அனுமதி தர மறுத்துள்ளது வரவேற்கத்தக்கது என்றார் அவர்.
பேட்டியின் போது, அந்தக் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலர் ஜோசப் நொலாஸ்கோ, மாநில வர்த்தக அணி செயலர் காதர் மைதீன், மாநில மருத்துவரணிச் செயலர் கிதிர், மாவட்டத் தலைவர் ஆசாத், மாவட்ட செயலர் மோத்தி, மாவட்ட துணைச் செயலர் ரபீக், மாவட்ட இளைஞரணி செயலர் பரக்கத்துல்லாஹ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.