குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோயிலில் மழை வேண்டி 2511 சுமங்கலிகள் பங்கேற்ற சிறப்பு பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
மழை பெய்து விவசாயம் செழிக்கவும், குடிநீர் தட்டுப்பாடு நீங்கவும் மற்றும் குடும்பங்களில் அமைதி நிலவ வேண்டியும் சேவாபாரதி அமைப்பு சார்பில் நடைபெற்ற இப்பூஜையை ராமசுப்பிரமணியன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு அருணா, மதுமதி அரவிந்த், ராதிகாகுமார், மதனா சிவக்குமார், வாசுகி டிமிட்ரோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்பூஜையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். அமைப்பின் முழு நேர ஊழியர் க. முத்துசெல்வி சுமங்கலி பூஜையை நடத்தினார்.
நிகழ்ச்சியில், இந்து முன்னணியின் மாநில துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார், மாவட்ட பாஜக செயலர் இரா. சிவமுருகன் ஆதித்தன், அமைப்பின் மாவட்டத் தலைவர் வெண்ணிமாலை, மாநில செயற்குழு உறுப்பினர் சண்முகம், மாவட்டப் பொருளாளர் நட்டார்ஜி, ஆர்எஸ்எஸ் மாவட்டச் செயலர் லிங்கபாண்டி, உடன்குடி ஒன்றிய தலைவர் திருநாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அமைப்பின் மாவட்டத் தலைவர் கிருஷ்ணமந்திரம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நிகிலா உதயகுமார், வள்ளித்தங்கம் லிங்கபாண்டி ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.