கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் திடீர் மறியல்
கோவில்பட்டியில் நகரப் பேருந்துகள் முறையாக இயக்கப்படாததை கண்டித்து அண்ணா பேருந்து நிலையத்தில் பயணிகள் திடீரென ஞாயிற்றுக்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டியில் இருந்து தினமும் 1.45 மணிக்கு சண்முகாபுரம் வழியாக லக்கம்மாள்தேவி நகருக்கு நகரப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் 2.30 மணி வரை இப்பேருந்து இயக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், பாதிக்கப்பட்ட செமப்புதூர், கசவன்குன்று, லக்கம்மாள்தேவி கிராமமக்கள் அண்ணா பேருந்து நிலையத்தில் நுழைவு வாயிலில் சாலையில் அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் அய்யப்பன், பேருந்து நிலையத்துக்குச்சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகளை தொடர்பு கொண்டு லக்கம்மாள்தேவி நகருக்கு பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.