மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அந்நாட்டில் இருந்து தப்பிக்க உதவியது தொடர்பாக சிறிய வகை சரக்கு கப்பல் மாலுமிகள் உள்ளிட்ட 9 பேரிடம் மாலத்தீவு தேசிய பாதுகாப்புப் படையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் தூத்துக்குடிக்கு வந்த சிறிய வகை சரக்கு கப்பலில் தப்பிவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, பல்வேறுகட்ட விசாரணைக்குப் பிறகு தூத்துக்குடியில் இருந்து மீண்டும் மாலத்தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அகமது அதீப், ஞாயிற்றுக்கிழமை சர்வதேச எல்லையில் வைத்து மாலத்தீவு தேசிய பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரை விரைவுப் படகு மூலம் தேசிய பாதுகாப்புப் படையினர் மாலத்தீவுக்கு அழைத்துச் சென்றனர்.
அதே நேரத்தில் சரக்கு கப்பலில் இருந்த தமிழகத்தைச் சேர்ந்த போஸ்கோ நிக்கோலஸ் பிரிட்டோ, இந்தோனேஷியாவை சேர்ந்த 8 பேர் உள்ளிட்ட 9 பேரையும் மாலத்தீவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. அகமது அதீப் மாலத்தீவில் இருந்து தப்பிச் செல்ல உதவியதாக கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் 9 பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாலத்தீவு தேசிய பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.