கோவில்பட்டியில் காலணி தைக்கும் தொழிலாளர்களுக்கு உபகரணங்களும், தொழில் செய்வதற்கு ஏதுவாக இடமும் வழங்கக் கோரி நகராட்சி ஆணையரிடம் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.
சமூக நீதி கூட்டமைப்பு தலைவர் மேரிஷீலா, செயலர் ஆம்ஸ்ட்ராங் ஆகியோர் தலைமையில் நகராட்சி ஆணையர் அச்சையாவிடம் அளித்த மனு விவரம்: 50-க்கும் மேற்பட்ட அருந்ததியர் இனத்தைச் சேர்ந்த காலணி தைக்கும் தொழிலாளர்கள் கோவில்பட்டி நகரில் உள்ளனர். காலணி தைக்கும் தொழிலாளர்களுக்கு, நகராட்சி நிர்வாகம் மக்கள் அதிகம் கூடும் இடங்களான ரயில் நிலையம், பேருந்து நிலையம், தினசரி சந்தை, அரசு அலுவலகங்கள் உள்ள பகுதிகளில் வாடகை ஏதுமின்றி இடம் ஒதுக்க வேண்டும். அவர்களுக்கு தொழில் கருவிகள் வழங்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
அப்போது, நல்லிணக்க பண்பாட்டுக் கழகம் மற்றும் ஐந்தாவது தூண் நிறுவனர் சங்கரலிங்கம், இந்திய கலாசார நட்புறவுக் கழக மாநிலச் செயலர் தமிழரசன், ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட பொதுச்செயலர் ராஜசேகரன், அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், ஜனநாயக மக்கள் உரிமைக் கழக தூத்துக்குடி வடக்கு மாவட்டத் தலைவர் ரவீந்தர், அனைத்து மருத்துவர் முன்னேற்றக் கழக தலைவர் கருப்பசாமி, செயலர் மகேந்திரன், வழக்குரைஞர் விஜயகுமார் மற்றும் குருரவிதாஸ் மற்றும் காலணி தைக்கும் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த சங்கரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.