தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ. 3.64 கோடியில் தொழில் தொடங்க வாய்ப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ. 3.64 கோடியில் தொழில் தொடங்க 5 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
தமிழக அரசின் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 25 சதவீத மானியத்துடன், வங்கிகளில் கடன் பெற்று புதியதாக தொழில் தொடங்க பயனாளிகளைத் தேர்வு செய்வதற்கான மாவட்ட அளவிலான நேர்முகத்தேர்வு, தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் உதவி ஆட்சியர் (பயிற்சி) அனு தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
அப்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் பல் மருத்துவமனை, உணவகம், இயந்திரங்களுக்கான உதிரி பாகங்கள் தயாரித்தல், காடா துணி நெய்தல் மற்றும் முந்திரி பருப்பு பதப்படுத்துதல் ஆகிய தொழில்கள் தொடங்குவதற்காக ரூ.3.64 கோடி திட்ட மதிப்பீட்டில் ரூ.64.60 லட்சம் மானியத்துடன் கூடிய 5 கடன் திட்டங்கள் தேர்வுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டன.
தொடர்ந்து, இணையதளம் மூலம் உரிமங்கள் மற்றும் அனுமதிகள் கோரி விண்ணப்பிக்கும் நிறுவனங்களுக்கு விரைந்து அனுமதிகள் வழங்க அனைத்து துறை அலுவலர்களுக்கும் உதவி ஆட்சியர் (பயிற்சி) அனு அறிவுரை வழங்கினார்.
இதையடுத்து, மாவட்ட அளவிலான குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான ஒருமுனைத் தீர்வுக்குழு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சுகாதாரத்துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், தொழில் பாதுகாப்புத்துறை, நகர் ஊரமைப்புத்துறை, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மின் ஆய்வுத்துறை, தூத்துக்குடி மாநகராட்சி, கோவில்பட்டி மற்றும் காயல்பட்டினம் நகராட்சிகள் உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) ஆகிய அலுவலகங்களில் இருந்து அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் தி. கண்ணன், மாவட்ட தொழில் மைய துணை இயக்குநர் அ. ஸ்வர்ணலதா, மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர் விஐயகுமார், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக கிளை மேலாளர் முருகன், சிட்கோ கிளை மேலாளர் ஆனந்த், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிறுவன உதவி இயக்குநர் ஜெரினா பப்பி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.