கோவில்பட்டி அருகே அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம், வரதம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட காட்டுராமன்பட்டி பகுதி பொதுமக்கள் சாலை, தெரு விளக்கு, குடிநீர், வாருகால் வசதிகள் கோரி ஊராட்சி நிர்வாகத்துக்கும், அதிகாரிகளுக்கும் பலமுறை மனு அளித்தும் பலனில்லையாம். இதையடுத்து, அவர்கள் காட்டுராமன்பட்டி விலக்கு கடலையூர் சாலையில் காலிக்குடங்களுடன் வியாழக்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் ஜெபராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பேச்சு நடத்தினால் மட்டுமே மறியலைக் கைவிடுவதாகக் கூறி அவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
அதிகாரிகள் பேச்சு நடத்த வருவதாக டி.எஸ்.பி. ஜெபராஜ் கூறியதையடுத்து, போராட்டக் குழுவினர் மறியலைக் கைவிட்டு சாலையோரம் அமர்ந்தனர். கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) முருகானந்தம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், எட்டயபுரம் வட்டாட்சியர் வதனாள் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
லிங்கம்பட்டியில் உள்ள ஆழ்துளைக் கிணறு பகுதியிலிருந்து காட்டுராமன்பட்டி பகுதிக்கு மோட்டார் அறை அமைத்து தண்ணீர் விநியோகிக்கும் பணிக்கான திட்ட மதிப்பீடு தயாரித்து அனுமதி பெற்று அப்பணியும், சாலை சீரமைப்புப் பணியும் விரைவாக நடைபெறும் எனக் கூறியதையடுத்து போராட்டக் குழுவினர் கலைந்து சென்றனர்.