தூத்துக்குடி மாநகராட்சி பசும்பொன்நகர் பூங்காப் பகுதியில் அடர்ந்த காடுகள் உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் நடும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பூங்காவுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடங்கள், மாநகராட்சிக்கு சொந்தமான திறந்த வெளிப் பகுதியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பூங்காக்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதில், ஒரு பகுதியாக மாநகராட்சிப் பகுதியில் பசுமையை மேம்படுத்தும் வகையில் இம்மாநகராட்சிக்குள்பட்ட பசும்பொன் நகர் பகுதியிலுள்ள பூங்கா இடத்தில் பல்வேறு வகை 2500 மரக்கன்றுகள் நடவு செய்து அடர்ந்த காடுகள் அமைக்கப் படுகிறது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மரக்கன்றுகள் நட்டு இப்பணியை ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார். மாநகராட்சி ஆணையர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் தலைமை வகித்தார். இதில், உதவி ஆட்சியர் (பயிற்சி) அனு, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், பசுமை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.