தூத்துக்குடி அருகே நாகம்பட்டி கல்லூரியில் தமிழ் இலக்கியக் கருத்தரங்கு வியாழக்கிழமை தொடங்கி 2 நாள்கள் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், நாகம்பட்டியிலுள்ள மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் "இலக்கியமும் இலக்கணமும்' எனும் தலைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்குக்கு, கல்லூரி முதல்வர் பெ. சேர்மக்கனி தலைமை வகித்தார். கருத்தரங்கினை, மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழக கல்லூரி மற்றும் உறுப்புக் கல்லூரிகளின் இயக்குநர் ப. ரவி தொடங்கி வைத்தார்.
கருத்தரங்கின் அமர்வுகளில், "சங்க இலக்கியத்தில் அகமும் புறமும்' எனும் தலைப்பில் சுந்தரனார் பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியர் க. ஜோதிமுருகன், "மாணவர்களும் படைப்பாளர்கள் ஆகலாம்' எனும் தலைப்பில் கரிசல் மண் எழுத்தாளர் சோ. தர்மன், "தொல்காப்பியரின் சொல்லாட்சி முறைகள்' எனும் தலைப்பில் கோவில்பட்டி அரசு கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் கோ. சந்தன மாரியம்மாள், "இலக்கிய வாசிப்பும் வரலாறும்' எனும் தலைப்பில் திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் இரா. இலக்குவன், "பொருள் இலக்கணமும் வாழ்வும்' எனும் தலைப்பில் கோவிந்தபேரி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி பேராசிரயர் ச. நவநீத கிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.
கருத்தரங்கில் பங்கேற்ற மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் சான்றிதழ்கள் வழங்கினார். இதில், கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் இரா. சேதுராமன், பேராசிரியைகள் தி. பிரதீபா தேவி, மு. பவானி, க. கல்யாணசுந்தரி மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.