கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள பெயின்ட் கடையில் செல்லிடப்பேசி திருடியவரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
அய்யனேரியைச் சேர்ந்தவர் சின்னச்சாமி. இவர் கோவில்பட்டி பிரதான சாலையில் பெயின்ட் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் சனிக்கிழமை இவரது மனைவி பகவதி இருந்தாராம். அப்போது கடைக்கு வந்த இளைஞர் ஒருவர், பெயின்ட் வாங்குவது சம்பந்தமாக விசாரித்துக் கொண்டிருந்தாராம். அப்போது கடையில் இருந்த செல்லிடப்பேசியை காணவில்லையாம். இதையடுத்து, கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைப் பார்த்தபோது, பகவதியிடம் பேசிக் கொண்டிருந்த இளைஞர், செல்லிடப்பேசியை எடுத்து மற்றொரு இளைஞரிடம் கொடுத்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தியதில், அவர், கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த தண்டபாணி மகன் கார்த்திக் (33) என்பதும், அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் கணேசபிரபுவிடம் திருடிய செல்லிடப்பேசியை கொடுத்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸார் கணேசபிரபுவை தேடி வருகின்றனர்.