திருச்செந்தூர் அருகே காயாமொழியில் சமையல் செய்த போது ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த பெண் உயிரிழந்த நிலையில், அவரை காப்பாற்ற முயன்று பலத்த காயமடைந்த கணவரும் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
காயாமொழி வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (34). டி.வி. மெக்கானிக். இவரது மனைவி ரஞ்சனி (26). இவர்களுக்கு மகாஸ்ரீ (7) என்ற மகளும், லோகித்செல்வன் (4) என்ற மகனும் உள்ளனர். ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ரஞ்சனியின் சேலையில் தீப்பற்றியுள்ளது. இதில் ரஞ்சனியும், அவரைக் காப்பாற்ற முயன்ற கணவர் விஸ்வநாதனும் பலத்த காயமடைந்தனர். இருவரையும் மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி பெற்று, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், திங்கள்கிழமை ரஞ்சனி உயிரிழந்தார். இந்நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த கணவர் விஸ்வநாதன் செவ்வாய்க்கிழமை மாலை உயிரிழந்தார்.
மனைவி இறந்த மறுநாளே கணவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து திருச்செந்தூர் வட்ட போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.