கோவில்பட்டி, திட்டங்குளம் ஊராட்சியில் வடக்கு திட்டங்குளம் பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும், ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டடத்தை மயானம் அருகே கட்டப்படுவதை கண்டித்தும் அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் திட்டங்குளம் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கான புதிய கட்டடம் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் தெற்கு திட்டங்குளம் பகுதியில் கட்டப்பட்டு வருகிறது.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாத்தியப்பட்ட மயானத்துக்கு அருகில் புதிய கட்டடம் கட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்; அனைத்து சமூக மக்களும் பயன்பெறும் வகையில் திட்டங்குளம் எட்டயபுரம் சாலையில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட வேண்டும்; வடக்கு திட்டங்குளம் பகுதியில் புதிய தெருவிளக்குகள் அமைத்துத் தரவேண்டும்; பெண்களுக்கான பொது கழிப்பிட வசதியை ஏற்படுத்தி தரவேண்டும்; சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டத்தை அதிகரித்து 30ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி அமைத்துத் தரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக ஒன்றிய துணைச் செயலர் தங்கப்பாண்டியன் தலைமையில் வடக்கு திட்டங்குளம் பகுதி பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
பின்னர், கோரிக்கை மனுவை வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சி) முருகானந்தத்திடம் வழங்கினர்.
மனுவைப் பெற்றுக் கொண்ட அவர் கோரிக்கைகள் குறித்து முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து போராட்டக் குழுவினர் கலைந்து சென்றனர்.