திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறுத்தொண்ட நாயனார் குருபூஜையை முன்னிட்டு சித்திரை பரணி சீராளன் உற்சவம் நடைபெற்றது.
பரஞ்சோதி என்ற சிவபக்தர் நாள்தோறும் ஓரு சிவனடியாருக்கு தனது இல்லத்தில் விருந்து அளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒரு நாள் பைரவர் வேடத்தில் வந்த சிவபெருமானை விருந்து உண்பதற்கு அழைத்தார். அவரிடம் சிவன், உங்களது ஆண் குழந்தையை மாமிசமாக்கி எனக்கு வழங்க வேண்டும் என்று கேட்டார்.
அதன்படியே பரஞ்சோதி, தனது மனைவியுடன் சேர்ந்து தனது ஒரே ஆண் குழந்தையாகிய சீராளனை மாமிசமாக்கி, இன்முகத்துடன் விருந்து உண்பதற்கு சிவனடியாரை அழைத்தார். அங்கு வந்த சிவனடியார், உங்கள் மகனை அழைத்து வருமாறு கூறினார். அவர்களும் வெளியே சென்று சீராளனை அழைத்தபோது சீராளன் உயிருடன் வந்தார். அதே நேரத்தில் வீட்டினுள்ளே இருந்த சிவனடியார் மறைந்து போனார். மாமிசமும் மறைந்து போனது.
ஆச்சரியமடைந்த பரஞ்சோதிக்கு பார்வதி மற்றும் முருகப்பெருமானுடன் சிவபெருமான் காட்சியருளியதாக புராணத்தில் கூறப்பட்டுள்ளது. அன்று முதல் பரஞ்சோதி சிறுத்தொண்ட நாயனார் என்று அழைக்கப்பெற்றார். இந்நிகழ்வை நினைவு கூரும் விதமாக ஆண்டுதோறும் சிறுத்தொண்ட நாயனார் குருபூஜையன்று, திருச்செந்தூர் சிவன் கோயிலில் இருந்து சீராளனுக்கு சிவபெருமான் காட்சியருளி, யானைமீது வைத்து கோயிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெறும். இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை மாலையில் சித்திரை பரணி சீரளான் உற்சவம் நடைபெற்றது.