கோவில்பட்டியில் ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞர் உள்பட இருவரை போலீஸார் கைது செய்தனர்.
கோவில்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்தவர் தங்கமாரியப்பன் மகன் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அந்தோணிராஜ்(39). இவர் சனிக்கிழமை இந்திரா நகர் பகுதியில் உள்ள பலசரக்குக் கடை முன்பு நின்று கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த இருவர் அந்தோணிராஜிடம் மது அருந்த பணம் கேட்டனராம். பணம் தர மறுத்ததையடுத்து, அரிவாளை கழுத்தில் வைத்து அவரை மிரட்டினராம். அவரின் சப்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதைக் கண்ட இருவரும் தப்பியோடிவிட்டனராம்.
இதுகுறித்து அந்தோணிராஜ் அளித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸார் இருவரையும் பிடித்து மேற்கொண்ட விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த பிச்சையா மகன் சண்முகப்பாண்டி(48) மற்றும் இனாம்மணியாச்சியைச் சேர்ந்த அங்கையர்கனி மகன் மாரிமுத்து(30) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் இருவரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.