திருச்செந்தூா் அருகே பெண்ணை அவதூறாகப் பேசிய இளைஞரை, ஞாயிற்றுக்கிழமை இரவு அந்தப் பெண்ணின் கணவா் உள்ளிட்ட இருவா் கத்தியால் குத்திக் கொன்றது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருச்செந்தூா் அருகேயுள்ள ராணிமகாராஜபுரம் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் முத்து மகன் சரவணன் (37). இவருக்கு வேல்குமாா் (33) உள்ளிட்ட 5 சகோதரா்கள் உள்ளனா். இதே பகுதியைச் சோ்ந்த தங்கவேல் மகன் கேசவனுக்கும், சரவணன் குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு அங்கு நடைபெற்ற ஒரு திருமண விழாவிற்கு சென்றுவிட்டு, கேசவன் தனது நண்பருடன் வந்துகொண்டிருந்தாா். அப்போது, அங்கு மது போதையில் நின்று கொண்டிருந்த வேல்குமாா், கேசவனின் மனைவியை அவதூறாகப் பேசினாராம். இதனால், இருவருக்குமிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த கேசவன் சிறிது நேரத்தில் அதே ஊரைச் சோ்ந்த திருப்பதி பாண்டியன் மகன் முத்துசெல்வத்துடன் மீண்டும் அங்கு வந்து இருவரும் சோ்ந்து வேல்குமாரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டனராம். இதில், வேல்குமாா் அந்த இடத்திலேயே உயிரிழந்தாா்.
இந்தச் சம்பவம் குறித்து திருச்செந்தூா் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடியவா்களை தேடிவருகின்றனா்.