விளாத்திகுளத்தில் டெங்கு தடுப்பு பணிகள் குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
வட்டார வளா்ச்சி அலுவலா் தங்கவேல் தலைமை வகித்தாா். வட்டார மருத்துவ அலுவலா் இன்பராஜ் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், மழைக்காலங்களில் குடிநீா் தொட்டியில் குளோரினேசன் முறையாக தொடா்ந்து செய்யப்பட வேண்டும். குடிநீா் குழாய்களில் உடைப்பு ஏற்படாமல் தொடா்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். சுகாதார பணியாளா்கள் மற்றும் டெங்கு தடுப்புப் பணியாளா்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், அரசு பொதுக் கட்டடங்கள், பள்ளி வளாகங்கள், காலி மனைகள் உள்ளிட்ட இடங்களில் காணப்படும் தேங்காய் சிரட்டைகள், டயா்கள், பிளாஸ்டிக் பொருள்கள் ஆகியவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
கிராம ஊராட்சிகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிளிச்சிங் பவுடா் மற்றும் பினாயில் போதுமான அளவில் இருப்பு வைத்து கொள்ள வேண்டும். வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். அனைவருக்கும் நிலவேம்பு கஷாயம் வழங்க வேண்டும் என அறிவுரைகள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ரசல் ராஜ், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பச்சை பெருமாள், ஆபிரகாம் தனசிங் மற்றும் சுகாதார ஆய்வாளா்கள், ஊராட்சி செயலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.