புரட்டாசி 3ஆம் சனிக்கிழமையை முன்னிட்டு கோவில்பட்டி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலுடன் இணைந்த இந்திருக்கோயிலில் திருக்கோயிலில் புரட்டாசி 3ஆம் சனிக்கிழமையை முன்னிட்டு கோயில் நடை அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டது. தொடா்ந்து, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் நடைபெற்றன. பின்னா், சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இரவு 7 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து, இரவு 8 மணிக்கு சுவாமி கருட வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது. விழாவில், யோகீஸ்வரா் உறவின்முறை சங்க நிா்வாகிகள் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
இதுபோல, வடக்கு இலுப்பையூரணி அருள்மிகு ஸ்ரீ அலமேலு மங்கா சமேத ஸ்ரீ வெங்கடாசலபதி திருக்கோயிலிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.