ஸ்ரீவைகுண்டம் பகுதியில் நிகழ்ந்த கொலை வழக்கில் தொடர்புடையவர் திருச்செந்தூர் நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தார்.
ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள மேலமங்கலக்குறிச்சி பிச்சையாபாண்டியன் மகன் கண்ணன் (27). இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏரல் அருகே நடந்த இரட்டைக்கொலை வழக்கு தொடர்பாக நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திட்டு வந்தாராம்.
இந்நிலையில் கடந்த மாதம் 29ஆம் தேதி ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் கையெழுத்திட்டுவிட்டு, நண்பர்கள் இருவருடன் புதுக்குடி ரயில்வே கேட்டில் இருந்து வெள்ளூர் செல்லும் போது, 8 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரைகொன்றுவிட்டு தலைமறைவான கும்பலை போலீஸார் தேடிவந்தனர்.
இந்நிலையில் அந்தக் கொலை தொடர்பாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான பேட்மாநகரம், சுந்தரலிங்கம்நகர் இசக்கியப்பன் மகன் காளிதாஸ் புதன்கிழமை திருச்செந்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் தினேஷ்குமார் முன்னிலையில் சரணடைந்தார்.
அவரை வருகிற 8ஆம் தேதி ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, காளிதாஸ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.