தூத்துக்குடி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜனை ஆதரித்து சமக தலைவர் நடிகர் சரத்குமார் திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். காமநாயக்கன்பட்டியில் திறந்த வேனில் நின்றபடி அவர் பேசியது:
மத்தியில் நிலையான பெரும்பான்மையான ஆட்சி மலர தாமரை சின்னத்தில் வாக்கு அளிக்க வேண்டும். காங்கிரஸ் கூட்டணி ஒரு சந்தர்ப்பவாதக் கூட்டணி, ஊழல் மிகுந்த கட்சி. அவர்களுடன் இணைந்திருப்பது திமுக. காங்கிரஸ் எல்லாமே ஊழல் தான். மத்தியில் நிலையான ஆட்சி, நியாயமான, நேர்மையான ஆட்சி மோடி தலைமையில் அமைவதற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். அதிமுக - பாஜக உருவாக்கிய மெகா கூட்டணி தான் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும். பிரதமர் மோடியை ராகுல்காந்தி காவல்காரன் என்றும் சொல்லியிருக்கிறார். மோடி நாட்டுக்கே காவல்காரர் தான். சிறந்த தலைவர் இருந்தால் தான். நல்லாட்சி தர முடியும். மத்தியில் பெரும்பான்மை ஆட்சி அமையும் போது தான் மாநிலத்தில் நமக்கு தேவைப்படும் நிதிகளையும், தீட்டுகின்ற திட்டங்களையும் செயல்படுத்தும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறந்த ஒரு கூட்டணியை உருவாக்கியிருக்கிறார். ஆகவே, அதிமுக - பாஜக கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றார் அவர். பிரசாரத்தின் போது, அமைச்சர் கடம்பூர் செ.ராஜு, வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன், சமக தென்மண்டல அமைப்பாளர் சுந்தர், வடக்கு மாவட்டச் செயலர் பாஸ்கர், பாஜக நிர்வாகிகள் பாலு, பாலாஜி, அதிமுக நிர்வாகிகள் விஜயபாண்டியன், துறையூர் கணேஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.