ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் மே 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திங்கள்கிழமை (ஏப்.22) வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.
இதற்காக, வேட்பு மனுக்கள் பெறக்கூடிய ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வட்டாட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா உடனிருந்தார். வேட்பு மனு தாக்கலின்போது வேட்பாளர்கள் அளிக்கும் பிரமான பத்திரத்தின் தகவலின் படி அனைத்து விதமான சான்றிதழ்களையும் அன்றைய தினமே பெற வேண்டும் என தேர்தல் நடத்தும் அலுவலரான சுகுமாரிடம் ஆட்சியர் தெரிவித்தார்.
ஆய்வின்போது, கோவில்பட்டி கோட்டாட்சியர் அமுதா, மணியாச்சி சரக காவல் துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், ஓட்டப்பிடாரம் காவல் ஆய்வாளர் சிவலிங்க சேகர் ஆகியோர் உடனிருந்தனர்.