கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்துக்குள்பட்ட துணை அஞ்சலகங்களில் செயல்பட்டு வரும் ஆதார் சேவை மையத்தின் வேலைநேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கோவில்பட்டி கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர்(பொ) சாந்தகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்துக்குள்பட்ட குறிப்பிட்ட அஞ்சல் அலுவலகங்களில் ஆதார் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. புதிதாக ஆதார் அட்டை எடுக்க, திருத்தங்கள் செய்ய பொதுமக்கள் அஞ்சல் அலுவலகத்தின் மூலம் பயன் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் ஆதார் சேவை மையத்தை மேம்படுத்தும் மற்றும் முறைப்படுத்தும் நோக்கில் வேலைநேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி எப்போதும்வென்றான், கடம்பூர், கயத்தாறு, நாகலாபுரம், நாலாட்டின்புத்தூர், புதூர், திருவேங்கடம், தேவர்குளம், கரிவலம்வந்தநல்லூர், குருவிகுளம், மேலநீலிதநல்லூர், முள்ளிகுளம், சேர்ந்தமங்கலம், வாசுதேவநல்லூர், வீரசிகாமணி, ஆலங்குளம், கீழப்பாவூர், நல்லூர், பாவூர்சத்திரம், சுரண்டை மற்றும் வீரகேரளம்புதூர் துணை அஞ்சலகங்களில் இயங்கிவரும் ஆதார் சேவை மையத்தின் பணி நேரம், பிற்பகல் 2 மணிமுதல் மாலை 4 மணி வரை இயங்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
அதுபோல், எட்டயபுரம், விளாத்திகுளம், கழுகுமலை, கடையநல்லூர், செங்கோட்டை, லட்சுமிபுரம், புளியங்குடி மற்றும் சிவகிரி துணை அஞ்சலகம், கோவில்பட்டி, சங்கரன்கோவில், தென்காசி தலைமை அஞ்சலகங்களில் அலுவலக வேலைநேரங்களில் சேவை மையம் செயல்படும்.
அனைத்து அஞ்சலகங்களிலும் ஞாயிறு மற்றும் விடுமுறை நாள்களை தவிர மற்ற நாள்களில் ஆதார் சேவை மையம் குறிப்பிட்ட நேரத்தில் முறையாக செயல்படும். பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.