சூறைக்காற்றில் சேதமடைந்த வாழை பயிரிட்ட விவசாயிகளுக்கு வாழை ஒன்றுக்கு ரூ. 500 வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக்குழு கூட்டம், மாவட்டத் தலைவர் ராமையா தலைமையில், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள குறுக்குச்சாலையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலர் நல்லையா முன்னிலை வகித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வீசிய சூறைக்காற்றில் சேதமான வாழை ஒன்றுக்கு அரசு ரூ. 500 இழப்பீடு வழங்க வேண்டும், தேசிய வங்கி, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளின் கடன்களுக்கான கால தவணையை நீட்டிக்க வேண்டும், 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டில் விடுபட்ட அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும், கடந்த ஆண்டில் படைப்புழு தாக்கியதில் பாதிக்கப்பட்ட மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நஷ்டஈடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.