கோவில்பட்டியில் அகில இந்திய ஹாக்கிப் போட்டி மே மாதம் 16ஆம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து, கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநர் சொக்கலிங்கம், முதல்வர் சண்முகவேல் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை:
கே.ஆர். மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் கே.ஆர். கல்வி நிறுவனங்கள், லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாதெமி ஆகியவை இணைந்து லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 11ஆம் ஆண்டு அகில இந்திய ஹாக்கிப் போட்டி மே 16 முதல் 26ஆம் தேதி வரை கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறையின் செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் நடைபெறுகிறது.
இப்போட்டியில் பெங்களூரு கனரா பேங்க், செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் ரயில்வே, மும்பை யூனியன் வங்கி, பெங்களூரு ஹாக்கி, கோவில்பட்டி லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாதெமி, ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல், தில்லி ஆல் இந்திய கஸ்டம்ஸ் மற்றும் ஜி.எஸ்.டி, தில்லி நேஷனல் ஹாக்கி அகாதெமி உள்பட 16 அணிகள் கலந்து கொள்கின்றன. இப்போட்டிகள், காலிறுதி ஆட்டம் வரை லீக் முறையிலும், பின்னர், இறுதிப் போட்டி வரை நாக்அவுட் முறையிலும் நடைபெறும். தினமும் காலை 6.30, மாலை 4.30, மாலை 6.30, இரவு 8 என்ற அடிப்படையில் 4 போட்டிகள் நடைபெறும்.
முதல் பரிசாக ரூ.1 லட்சம், 2ஆம் பரிசாக ரூ.75 ஆயிரம், 3ஆம் பரிசாக ரூ.50ஆயிரம், 4ஆம் பரிசாக ரூ.30ஆயிரம் ரொக்கமும், 4 அணிகளுக்கும் லட்சுமி அம்மாள் நினைவு சுழற்கோப்பையும் வழங்கப்படும். மேலும், காலிறுதிக்கு தகுதி பெறும் நான்கு அணிகளுக்கு தலா ரூ.20 ஆயிரம் ஆறுதல் பரிசு வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.