கட்டாரிமங்கலம் ஸ்ரீஅழகிய கூத்தர் கோயில், குலசேகரன்பட்டினம் வீரமனோகரி அம்மன் கோயில்களில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சாத்தான்குளம் அருகே கட்டாரிமங்கலம் ஸ்ரீஅழகியகூத்தர் சமேத ஸ்ரீசிவகாமி அம்பாள் கோயிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு நடராஜர், அம்பாள் , பரிவார மூர்த்தி தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை ஆகியவை நடைபெற்றது. இதில், திரளான பெண்கள் பங்கேற்று அம்பாளை போற்றி பாடல்கள் பாடினர். இதையடுத்து நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சியில் பெண்களுக்கு வளையல், மஞ்சள் கயிறு வழங்கப்பட்டன. தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
தச்சமொழி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில், உஜ்ஜைனி மாகாளியம்மன் கோயில்களில் அம்பாள், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், வளைகாப்பு சிறப்பு பூஜை ஆகியவை நடைபெற்றன.
உடன்குடி: குலசேகரபட்டினம் அருள்மிகு வீரமனோகரி அம்மன் கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு மாக்காப்பு பூஜை, சந்தனக்காப்பு பூஜை, இரவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அங்கி சாத்தி பூஜை, படைப்பு தீபாராதனை ஆகியவை நடைபெற்றது.