கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் ஏ.டி.எம். மையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவில்பட்டி தமாகா நகரத் தலைவர் ராஜகோபால் ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு: தூத்துக்குடி மாவட்டத்தின் 2 ஆவது பெரிய நகரம் கோவில்பட்டி. கோவில்பட்டி பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கல்வி, பணி போன்றவற்றுக்காக நாள்தோறும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வருகின்றனர்.
திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தோர் இப்பேருந்து நிலையம் வழியாக செல்கின்றனர். மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ரயில் சேவைக்காக கோவில்பட்டிக்கு வந்து செல்கின்றனர். கோவில்பட்டி ரயில் நிலையத்தில் ஏடிஎம் மையம் செயல்படுகிறது. ஆனால், அண்ணா பேருந்து நிலையப் பகுதியில் வங்கி ஏடிஎம் மையம் இல்லை. ஆகவே, அண்ணா பேருந்து நிலையம் வளாகத்தில் ஏடிஎம் மையம் அமைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.