சிறுத்தொண்ட நல்லூரில் ஆடித்தவசு திருவிழா
ஏரல் அருகே உள்ள சிறுத்தொண்டநல்லூர் கீழத்தெரு இந்து நாடார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு சங்கரேஸ்வரர் சமேத அருள்மிகு கோமதி அம்பாள் திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை ஆடித்தவசு திருவிழா நடைபெற்றது.
இதையொட்டி, இம் மாதம் 4 ஆம் தேதி திருவிழா திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் காலை, மாலையில் சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. கடந்த 10 ஆம் தேதி காலை அருள்மிகு நடராஜர் சமேத அருள்மிகு சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. அன்று மாலை நடராஜர் சிவப்பு சாத்தி தரிசனமும், அருள்மிகு கோமதி அம்பாள் தங்கபாவாடை தரிசனமும் நடைபெற்றது. ஆக. 11 ஆம் தேதி காலையில் வெள்ளை சாத்தி தரிசனம், மாலையில் பச்சை சாத்தி தரிசனமும் நடைபெற்றது.
ஆடித்தவசு: விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடித்தவசு திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. காலை 6 மணிக்கு அருள்மிகு கோமதி அம்பாள் தவசுக்காக எழுந்தருளல் நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு தாமிரவருணி நதியில் இருந்து புனிதநீர் மற்றும் பால்குடம் எடுத்து வரப்பட்டது. பகல் 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் உச்சிகால தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7 மணிக்கு சுவாமி சங்கரேஸ்வரர் , சங்கரநாராயணராக கோமதி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெற்றது. நள்ளிரவு சங்கரேஸ்வரராக காட்சி அருளி, சங்கரேஸ்வரர், கோமதி அம்பாள் கற்பக பொன் சப்பரங்களில் வீதி உலா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.