எட்டயபுரம் வட்டம் கீழ்நாட்டுக்குறிச்சியில் ஆற்று மணல் திருட்டை தடுத்து நிறுத்தக் கோரி நாம் தமிழர் கட்சியினர் வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலர் பூல்பாண்டி தலைமை வகித்தார். விளாத்திகுளம் ஒன்றியச் செயலர் ரமேஷ்குமார் முன்னிலை வகித்தார். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, கோரிக்கை தொடர்பாக வட்டாட்சியர் அழகரிடம் அவர்கள் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கீழ்நாட்டுக்குறிச்சி கிராமத்தில் வைப்பாற்றின் அருகே சவுடு மண் மற்றும் சரள் மண் அள்ள வருவாய்த் துறை, கனிமவளத்துறையிடம் அனுமதி பெற்றுள்ள நபர்கள், முறைகேடாக ஆற்று மணலை லாரிகளில் அள்ளிச் செல்கின்றனர். எனவே, சரள் மண், சவுடு மண் அள்ளுவதற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தன.