தென் மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் சாத்தான்குளம் மேரி இமாகுலேட் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
தூத்துக்குடி ஸ்பிக் நகரில் சோபுகாய் சோஜிரீயு கராத்தே பள்ளி சார்பில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான இப்போட்டியில் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டியை கராத்தே அமைப்பின் இந்திய தொழில் நுட்ப இயக்குநரும், இந்திய தலைமை பயிற்சியாளருமான சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார்.
இதில், சாத்தான்குளம் மேரி இமாகுலேட் பள்ளி மாணவர்கள் கட்டா பிரிவில் கலந்து கொண்டனர். 12 முதல் 13 வயது பிரிவில் மாணவர்கள் ஆரோன் ஜெபஸ், இசக்கிமுத்து ஆகியோர் தங்கப்பதக்கம் பெற்றனர். மேலும், பல்வேறு பிரிவுகளில் மாணவர்கள் ஆல்வின், ஹரீஸ் அன்டோ, ஜெரீஸ் அன்டோ, வின்சி பாத்திமா, ராகேஷ், ஜெபசாம் ஆகியோர் வெள்ளிப்பதக்கமும், 14 மாணவர்கள் வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.
மாணவர்களை பள்ளித் தாளாளர் மற்றும் முதல்வர் செல்வராயர், கராத்தே பயிற்சியாளர் முத்துராஜா, உடற்கல்வி ஆசிரியர் வேல்கனி உள்ளிட்டோர் பாராட்டினர்.