தூத்துக்குடியில் பனங்கருப்புகட்டி, பனங்கற்கண்டு தயாரிப்பாளர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
உணவுப் பாதுகாப்பு துறை சார்பில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன் தலைமை வகித்தார். மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் கருணாகரன் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் பனங்கற்கண்டு, பனங்கருப்புகட்டி ஆகியவற்றில் சீனி கலப்படம் செய்த கற்கண்டு மற்றும் சீனி கலந்த கருப்புகட்டி விற்பனை செய்யப்படுவதாக வரும் புகார்கள், 100 சதவீதம் தரமான பனங்கருப்புகட்டி, பனங்கற்கண்டு தயாரிப்பை உறுதி செய்வது, உணவுப் பாதுகாப்பு உரிமம் பெறுவது, பிற துறைகளில் பெறப்பட்ட உரிமம் மற்றும் தடையில்லா சான்றுகளை புதுப்பிப்பது, உணவுப் பாதுகாப்பு துறையால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வுக் கூடங்களில் பொருள்களை ஆய்வு செய்து பகுப்பாய்வு அறிக்கை பெறுவது, நுகர்வோர்களுக்கு கலப்படமற்ற தரமான பொருள்களை வழங்குவது குறித்து அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில், தூத்துக்குடி, உடன்குடி, வேம்பார் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பனைப் பொருள்கள் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள், சங்க நிர்வாகிகள், உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.