சாத்தான்குளம் ஒன்றியம் அரசூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
நீர்நிலைகள் மேம்பாடு மற்றும் மழை நீர் சேகரிப்பு குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அனைத்து வீடுகளுக்கும், 2024 க்குள், குழாய் வழியாக, குடிநீர் தரும், மத்திய அரசின் ஜல் ஜீவன் இயக்கம் திட்டம் குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அரசூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
இடைச்சிவிளையில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு ஜல் சக்தி அபியான் திட்ட தூத்துக்குடி மாவட்ட மத்திய கண்காணிப்பாளர் பிரனவ் குல்லார் தலைமை வகித்தார். ஊராட்சிகளின் உதவி இயக்குநர் உமாசங்கர், மாவட்ட திட்ட அலுவலர் தனபதி ஆகியோர் முன்னிலை வகித்தார்.
மாவட்ட மத்திய கண்காணிப்பாளர் பிரனாவ் குல்லார் பேசியது; தமிழகம் மழை மறைவு பிரதேசம் என்பதால் மழை நீரை சேமிக்கும் கட்டாயத்துக்கு வந்துள்ளோம். மழை நீர் சேமிப்பு மற்றும் நீரை பாதுக்கும் வகையில் தான் மத்திய அரசு ஜல் சக்தி அபியான் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. நீரை சேமிக்கும் வகையில் அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேமிப்பு தொட்டி அமைக்க வேண்டும். கிராமங்களில் மரக்கன்று நட்டு பராமரிக்க வேண்டும். நாம் தண்ணீரை சேமித்து நிலத்தடி நீரை பாதுகாக்கவில்லையெனில் தற்போது விற்கப்பட்டு வரும் பாக்கெட் தண்ணீரைதான் நாம் அதிகம் பயன்படுத்திடும் நிலை வரும். ஆதலால் தண்ணீர் சேமிப்பதுடன், நீர்மேலாண்மை உயர விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்றார் அவர்.
தீர்மானங்களை ஊராட்சி செயலர் அமுதாதேவி வாசித்தார். கூட்டத்தில், ஜல் சக்தி அபியான் திட்டத்தில் அரசூர் ஊராட்சியில் தடுப்பணை, குளம் தூர்வாருதல் உள்ளிட்ட 50க்கு மேற்பட்ட பணிகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. இதில், மாவட்ட ஊரக முகமை செயற்பொறியாளர் சங்கரஜோதி, திருச்செந்தூர் உதவிச் பொறியாளர் கெளதமன், ஒன்றிய தொகுதி அலுவலர் ஜான்கென்னடி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மோரிஸ், கிராம நிர்வாக அலுவலர் ரவிசின்னத்துரை, மாவட்ட அன்னையர் முன்னணி பொறுப்பாளர் சுந்தரவேல், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சாத்தான்குளம் ஒன்றிய ஆணையர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி நன்றி கூறினார்.
கூட்டத்தில் பங்கேற்ற மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.