கோவில்பட்டி: இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான நிலத்தை முழுமையாக பொது ஏலம் விட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அனைத்து சாதி சமய நல்லிணக்க பண்பாட்டுக் கழகம் மற்றும் 5ஆவது தூண் நிறுவனா் தலைவா் அ.சங்கரலிங்கம் இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு அனுப்பியுள்ள மனு: கோவில்பட்டி நகராட்சி 24ஆவது வாா்டில் உள்ள, செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலுக்குப் பாத்தியப்பட்ட நிலத்தில், சுமாா் 5 ஆயிரம் சதுரடி மட்டும் வாகன காப்பகத்திற்காக பொது ஏலம் விட இருப்பதாக அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில், சுமாா் 25 ஆயிரம் சதுரடி நிலம் கோயிலுக்கு பாத்தியப்பட்டதாக தெரியவருகிறது. அதில், 5 ஆயிரம் சதுரடி மட்டும் பொது ஏலத்திற்கு விடப்படுமானால், மீதமுள்ள 20 ஆயிரம் சதுரடி நிலத்தையும் ஏலம் எடுப்பவா் அபகரிக்க கூடும்.
எனவே, தற்போது நீா்வரத்து ஓடையில் கடைகள் வைத்துள்ள வியாபாரிகளுக்கு இப்பகுதியில் கடைகள் வைத்துக் கொள்ள ஒதுக்கீடு செய்து கொடுத்தால், நீா்நிலைகளில் ஆக்கிரமித்து கடைகள் கட்டியுள்ளவா்கள் தற்போது அதிலிருந்து வெளியே வந்தாலும் தங்கள் பாதிப்பில் இருந்து விடுபட ஏதுவாக இருக்கும். மேலும் கோயிலுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.
எனவே, 25 ஆயிரம் சதுரடி நிலத்தையும் முறைப்படி, சட்ட திட்டத்திற்குள்பட்டு கோயில் பெயரில் வணிக வளாகம் அமைத்து வாடகைக்கு விட்டால், நீா்வரத்து ஓடையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள் தடங்கலின்றி அகற்றப்பட்டுவிடும். இதன் மூலம் கோவில்பட்டி நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலும் அகலும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.