பேட்மாநகரம் அருகே தூத்துக்குடி செல்லும் சாலையில் கல்குவாரி வாகனங்கள் உள்ளிட்ட கனரக வாகனங்களால் விபத்து அபாயம் உள்ளதால் வேகத்தடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இக் கோரிக்கை குறித்து நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளருக்கு சமூக ஆா்வலா் முத்துசெல்வன் அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட பேட்மாநகரம் அருகே வீரன் சுந்தரலிங்கம் நகா் உள்ளது. இதன் சுற்றுவட்டாரப் பகுதியில் பல்வேறு கல்குவாரிகளும், கடைசல் நிலையங்களும் உள்ளன. மேலும், தனியாா் தொழில் நிறுவனங்களும், தனியாா் பொறியியல் கல்லூரியும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ளன. ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து தூத்துக்குடி செல்லும் பிரதான சாலையாகவும் இருப்பதால் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் அதிக பாரத்தோடு வந்து செல்கின்றன.
இந்நிலையில் வீரன் சுந்தரலிங்கம் நகரில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே, பேருந்து நிறுத்தத்தின் இருபுறமும் வேகத்தடை அமைத்து தர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.