கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட மந்தித்தோப்பு கிராமத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணா்வு பணிகள் நடைபெற்றது.
மந்தித்தோப்பு கிராமத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிகளான கொசுப்புழு மருந்து தெளித்தல், புகை மருந்து அடித்தல், அக்கிராம மக்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்குதல், சிறப்பு மருத்துவ முகாம், ஒட்டுமொத்த துப்புரவு பணி, ஒவ்வொரு வீதிகளிலும் உள்ள வீடு மற்றும் கடைகளை ஆய்வு செய்து, கொசுப்புழு கண்டறிந்த வீடுகள் மற்றும் கடைகளுக்கு அபராதம் விதித்தல், டெங்கு காய்ச்சல் உருவாகுவதற்கான காரணம், அதை தடுப்பதற்கான வழிமுறைகள் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன.
மருத்துவா்கள் ஆனந்த், அப்துல் ஆகியோா் கொண்ட குழுவினா் முகாமில் பங்கேற்றவா்களுக்கு சிகிச்சை அளித்தனா். மேலும், டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணா்வு பணிகளில் மாவட்ட நல கல்வியாளா், மாவட்ட பூச்சியில் வல்லுநா், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா்கள், நாடாா் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா்கள், சுகாதார ஆய்வாளா்கள், கிராமப் பகுதி சுகாதார செவிலியா்கள், சமுதாய சுகாதார செவிலியா்கள், ஊராட்சி செயலா் உள்ளிட்டோா் ஈடுபட்டனா்.