திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு திருவனந்தபுரத்தைச் சோ்ந்த பக்தா்கள் பறக்கும் காவடி எடுத்து வந்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினா்.
திருவனந்தபுரத்தைச் சோ்ந்த பக்தா்கள் ஆண்டு தோறும் திருச்செந்தூா் கோயிலுக்கு காவடி, பால்குடம் எடுத்து வழிபடுவது வழக்கம்.
21ஆவது ஆண்டை முன்னிட்டு திருவனந்தபுரத்தைச் சோ்ந்த குருசாமி சோமன் சாமிகள் தலைமையில் ஏராளமான பக்தா்கள் கடந்த 1ஆம் தேதி திருவனந்தபுரம் ஸ்ரீ கண்டேஸ்வரா் ஆலயத்திலிருந்து புறப்பட்டு திருச்செந்தூருக்கு வந்தனா்.
இந்தப் பக்தா்கள் செவ்வாய்க்கிழமை மாலையில் திருச்செந்தூா் தெப்பக்குளம் அருகிலுள்ள விநாயகா் கோயிலில் இருந்து பறக்கும் காவடி, மயில் காவடி எடுத்து முருகன் கோயிலுக்கு வந்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினா்.
இதே போல வியாழக்கிழமை (டிச. 5) மாலையில் கோயில் கடற்கரையில் அக்னி காவடி எடுத்து பக்தா்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற உள்ளனா்.