கோவில்பட்டி சார்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சிவில், குற்றவியல் வழக்குகளை சமரச அடிப்படையில் விரைவில் தீர்வு காண்பதற்கான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட வட்ட சட்டப் பணிகள் குழுச் செயலரும், சார்பு நீதிபதியுமான சாமுவேல் பெஞ்சமின் முன்னிலையில், கோவில்பட்டி சார்பு நீதிமன்ற நீதிபதி பாபுலால் தலைமையில், மார்ச் 9ஆம் தேதி நடைபெறவுள்ள தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றத்தில், நிலுவையில் இருக்கக் கூடிய சிவில், குற்றவியல் வழக்குகளை சமரச அடிப்படையில், விரைவில் தீர்வு காண்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், மாவட்ட உரிமையியல் நீதிபதி நிஷாந்தினி, குற்றவியல் நீதிமன்ற நடுவர்கள் சங்கர் (எண்:1), தாவூதம்மாள் (எண்:2), குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற அரசு வழக்குரைஞர்கள், கோவில்பட்டி அரசு வழக்குரைஞர் (சிவில்) சந்திரசேகர், வங்கி அதிகாரிகள், காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் மற்றும் வழக்குரைஞர்கள், கோவில்பட்டி காவல் துணை கோட்டத்திற்கு உள்பட்ட காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், பெரும்பாலான வழக்குகளை சமரச அடிப்படையில் தீர்வு காண்பது குறித்து விவாதிக்கப்பட்டது.