கோவில்பட்டி அருகே சிதம்பராபுரம் பகுதியில் உள்ள நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவில்பட்டி நகராட்சிக்குள்பட்ட குப்பைக் கிடங்கு, எட்டயபுரம் சாலையில் உள்ள சிதம்பராபுரத்தில் சுமார் 12 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது. இங்கு சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் மக்கும் மற்றும் மக்கா குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய பகுதிகளில் குப்பைகளைப் பயன்படுத்தி உரம் தயாரிப்பதற்கான இயந்திரம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மக்கா குப்பைகள் சேகரிக்கப்பட்ட இடத்தில் வெள்ளிக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த கோவில்பட்டி தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.