கோவில்பட்டியில் செல்லிடப்பேசி திருட்டில் ஈடுபட்ட இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
கோவில்பட்டி இனாம்மணியாச்சி பைபாஸ் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் காளிராஜ் (62). இவர் கடந்த 9ஆம் தேதி இரவு வீட்டின் ஜன்னல் ஓரத்தில் செல்லிடப்பேசியை வைத்துவிட்டு தூங்கினாராம். காலையில் எழுந்து பார்த்த போது செல்லிடப்பேசியை காணவில்லையாம். இதுகுறித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை போலீஸார் இனாம்மணியாச்சி பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது, சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து விசாரித்ததில், அவர் இந்த திருட்டு வழக்கில் தொடர்புடையவர் என்பதும், அவர், ராஜபாளையம் ராம் நகர் நடுத் தெருவைச் சேர்ந்த கருணாகரன் மகன் பிரபு (34) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்த காளிராஜுக்குச் சொந்தமான செல்லிடப்பேசியை பறிமுதல் செய்தனர்.