உடன்குடி அருகே சிற்றுந்தும், காரும் மோதிக்கொண்டதில் இளைஞர் உயிரிழந்தார்.
குலசேகரன்பட்டினம் கருங்காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மாடசாமி மகன் மகாராஜா (28). நுகர்பொருள்கள் விற்பனை முகவராக தொழில் செய்து வந்த இவர், பொங்கலையொட்டி தனது காரில் உடன்குடிக்கு வந்து பொருள்களை வாங்கிவிட்டு, நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த கூடலிங்கம் (27), சுந்தர் (27), முத்துராமலிங்கம் (27) ஆகியோரை ஏற்றிக்கொண்டு, அங்கிருந்து குலசேகரன்பட்டினத்துக்கு திரும்பினாராம்.
அப்போது, குலசேகரன்பட்டினம் புறவழிச்சாலை பகுதியில், மணப்பாட்டில் இருந்து உடன்குடி வந்துகொண்டிருந்த சிற்றுந்து மோதியதாம். இதில் மகராஜா மற்றும் அவரது நண்பர்கள், சிற்றுந்து ஓட்டுநர் முத்துராமலிங்கம் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து குலசேகரன்பட்டினம் போலீஸார் அவர்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியில் மகராஜா உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.