கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளைச் சேர்ந்த திருமண மண்டபம், ஹோட்டல், மருத்துவமனைகளில் சேகரமாகும் குப்பைகளை உரமாக்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு நகராட்சி ஆணையர் அச்சையா தலைமை வகித்தார். சுகாதார அலுவலர் இளங்கோ, ஆய்வாளர்கள் முருகன், சுரேஷ், சுரேஷ்குமார், திருப்பதி, வள்ளிராஜ் மற்றும் கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள ஹோட்டல் உரிமையாளர்கள், மேலாளர்கள், மருத்துவமனை நிர்வாகிகள், திருமண மண்டப உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் 5ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவுக்கு மேல் உள்ள நிறுவனங்களில் உற்பத்தியாகும் குப்பைகளை தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்து மக்கும் குப்பைகளை உரமாக்கவும், மக்கா குப்பைகளை அழிக்கவும் உடன்பாடு செய்து கொள்ளலாம் என்றும், நிறுவனங்களில் உற்பத்தியாகும் குப்பைகளை வெளியே போடக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.
தனியார் நிறுவனத்திடம் செய்து கொள்ளும் ஒப்பந்தத்தை நகராட்சி நிர்வாகம் கண்காணிக்கும் என்றும், அதில் ஏற்படும் குறைகளை நகராட்சி நிர்வாகம் கண்டறிந்து நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, நகராட்சிக்கு உள்பட்ட ஹோட்டல், திருமண மண்டபம், மருத்துவமனை மற்றும் வணிக நிறுவனங்கள் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் உள்ள சட்ட திட்டங்களை முறையாகக் கையாள வேண்டும் என கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.