பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். நகரத் தலைவர் சண்முகராஜா முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. சுடலையாண்டி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினார்.
சொத்துவரியை உயர்த்திய நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், நீர் வழி பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை நிறைவேற்றாத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், கர்நாடக மாநிலத்தில், ஆட்சியில் உள்ள கூட்டணி ஆட்சியை கவிழ்க்க குதிரை பேர பண அரசியலை அரங்கேற்றி, ஜனநாயக படுகொலை செய்ததாக மத்திய பாஜக ஆட்சியை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், வடக்கு மாவட்டச் செயலர் ஆர்.கார்த்திக் காமராஜ், வடக்கு மாவட்ட துணைத் தலைவர்கள் திருப்பதிராஜா, வழக்குரைஞர் அய்யலுசாமி, ராமச்சந்திரன், கட்சியின் எஸ்.சி, எஸ்.டி. பிரிவு மாவட்டத் தலைவர் மாரிமுத்து, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வழக்குரைஞர் மகேஷ்குமார், சவரி, மாவட்ட மகளிர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாரியம்மாள், கயத்தாறு வட்டாரத் தலைவர் செல்லத்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.