சர்வதேச அளவிலான யோகாசன போட்டியில் வெற்றிபெற்ற தூத்துக்குடி மாவட்ட மாணவர்- மாணவிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா பாராட்டு தெரிவித்தார்.
தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் உள்ள கைநான் மைதானத்தில் பசிபிக் ஏசியன் என்ற பெயரில் சர்வதேச அளவிலான யோகாசன போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில், இந்தியா, தாய்லாந்து, மலேசியா, ஜப்பான், பிலிப்பின்ஸ், இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து 137 மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில், தடகள யோகாவில் 15 முதல் 18 வயதுப் பிரிவில் தமிழகம் சார்பில், இந்திய பயிற்சிக் கழகம் மூலம் கோவில்பட்டியிலிருந்து பங்கேற்ற கயத்தாறு பள்ளி 10ஆம் வகுப்பு மாணவி மதுபாலா முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். நடன யோகாவில் 12 முதல் 15 வயதுப் பிரிவில், கோவில்பட்டியில் 7ஆவது வகுப்பு பயிலும் மாணவர் சவுரிராஜன் முதலிடம் பிடித்து தங்கமும், தடகள யோகா போட்டியில் 2ஆம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கமும் வென்றார். தடகள யோகாவில் 10 முதல் 12 வயதுப் பிரிவில் கயத்தாறு பள்ளி 7ஆம் வகுப்பு மாணவர் கெளசிக் 2ஆம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கமும், மாணவர் சுபாஷ் 3ஆம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கமும் வென்றனர். இவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா வியாழக்கிழமை நேரில் அழைத்து பாராட்டினார்.