திருநெல்வேயில் ஜனநாயக வாலிபர் சங்க பொருளாளர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தூத்துக்குடி, கோவில்பட்டியில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலியில் ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் அசோக் அடையாளம் தெரியாத நபர்களால் புதன்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தூத்துக்குடி மாவட்டக் கிளை சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலர் எம்.எஸ். முத்து தலைமை வகித்தார். இதில், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கொலை குற்றவாளிகளை விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
கோவில்பட்டி: கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் உமாசங்கர் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் நகரச் செயலர் முருகன், ஒன்றியச் செயலர்கள் ஜோதிபாசு (கோவில்பட்டி), சாலமோன்ராஜ் (கயத்தாறு), மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஜி.ராமசுப்பு, விஜயலட்சுமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
இதில், மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைச் சங்க மாநிலச் செயலர் முத்துக்காந்தாரி, விவசாயிகள் சங்க மாவட்டப் பொருளாளர் மணி, கட்டடத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலர் தெய்வேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.