தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை சட்டப்பேரவை உறுப்பினர் கீதா ஜீவன் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மகப்பேறு பிரிவில், சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.12.50 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் மற்றும் அறை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், புற்றுநோய் சிகிச்சை பிரிவில் ரூ. 5 லட்சம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கருவி அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினர் கீதா ஜீவன் கலந்து கொண்டு குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், மருத்துவமனை கண்காணிப்பாளர் ராமசுப்பிரமணியன், உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, திமுக மாநில பொதுக் குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலர் ஆனந்தசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, தூத்துக்குடி சி.வ. அரசு மேல்நிலைப் பள்ளியில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தையும் எம்எல்ஏ திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், பள்ளி தலைமையாசிரியர் செந்தூர்கனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.