திருச்செந்தூர் அருகே காருடன் நேருக்கு நேர் மோதிய ஆட்டோ கவிழ்ந்ததில் 7 பேர் பலத்த காயமடைந்தனர்.
காயல்பட்டணம், சுலைமான் நகரைச் சேர்ந்தவர் சாகுல்ஹமீது (32). ஆட்டோ ஓட்டுநர். இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது ஆட்டோவில் காயல்பட்டணத்தைச் சேர்ந்த 4 பெண்கள் உள்ளிட்ட 6 பேரை ஏற்றிக் கொண்டு, திருச்செந்தூரில் நடைபெறும் பொருள்காட்சிக்கு வந்தார். பிறகு, பொருள்காட்சியை பார்த்துவிட்டு, அதே ஆட்டோவில் ஊர்திரும்பிக் கொண்டிருந்தனர்.
வீரபாண்டியன்பட்டினம் வளைவில் செல்லும்போது, எதிரே வந்த கார் ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியதில், ஆட்டோ கவிழ்ந்தது. இதில், சாகுல்ஹமீது (32), முகமது காசிம் (18), ஹபீலா (56), நசுகா (49), ஹசிகா கரீனா, ரபீக் (60), கலீமா பாரீஷா ஆகிய 7 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் திருச்செந்தூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.