தூத்துக்குடி மாவட்டம், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்கம் தொகுதி - 3 மானாவாரி தொகுப்பு மேம்பாட்டு அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் கோவில்பட்டியில் நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் தலைமை வகித்து, பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்துப் பேசினார்.
தொடர்ந்து, மானாவாரி பயிர் மேலாண்மை பயிற்சி கையேடை மாவட்ட வருவாய் அலுவலர் வெளியிட, அதன் முதல் பிரதியை கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் முருகன் பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து, கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் முதல்வர் இறைவன் அருட்கனி அய்யநாதன் , கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையப் பேராசிரியர் முருகன், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் பிரேமா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பாலசுப்பிரமணியன், வேளாண்மை துணை இயக்குநர் மற்றும் துணை திட்ட இயக்குநர் ராஜாசிங், வேளாண்மை துணை இயக்குநர் சாந்திராணி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் (பொ) ஜாஹீர்ஹுசைன், தமிழ்நாடு நீர்வள நிலவள மேம்பாட்டுத் திட்ட வேளாண்மை துணை இயக்குநர் ஆசீர் கனகராஜன், தரக்கட்டுப்பாடு வேளாண்மை உதவி இயக்குநர் வசந்தி, வேளாண்மை உதவி இயக்குநர் ஆல்பர்ட் ராபின்சன் ஆகியோர் பேசினர்.
பயிற்சியில், வேளாண்மை அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள், தோட்டக்கலைத் துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறை, வேளாண்மை பொறியியல் துறை மற்றும் கால்நடை துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
தூத்துக்குடி வேளாண்மை இணை இயக்குநர் மகாதேவன் வரவேற்றார். உதவி இயக்குநர் நாகராஜ் நன்றி கூறினார்.