சாத்தான்குளம் அருகே தோட்டத்தில் புகுந்து மூதாட்டியிடம் நகையைப் பறித்து சென்றதாக இளைஞரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
சாத்தான்குளம் அருகேயுள்ள பூச்சிக்காடு ஆர்.சி.சர்ச் தெருவைச சேர்ந்த ஜேசுமரியான் மனைவி தெரசம்மாள்(75). இவருக்குச் சொந்தமான தோட்டம் பூச்சிக்காடு விலக்கில் உள்ளது. கடந்த ஜன. 21ஆம்தேதி தோட்டத்திற்கு வந்த இளைஞர் ஒருவர், தெரசம்மாள் கவனத்தை திசை திருப்பி அவர் அணிந்திருந்த ஏழரை பவுன் நகையைப் பறித்துச் சென்றாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் தட்டார்மடம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இந்நிலையில், காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் தலைமையில் போலீஸார் தச்சன்விளைப் பகுதியில் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரைப் பிடித்து விசாரித்ததில், அவர், குமாரபுரத்தைச் சேர்ந்த ஞான்ராஜ் மகன் அற்புதராஜ்(33) என்பதும், மூதாட்டியிடம் நகையைப் பறித்தவர் எனவும் தெரியவந்ததாம். இதையடுத்து அவரை கைது செய்து, நகையை மீட்டனர்.