குரும்பூர் அருகே இரு பிரிவினர் கோஷ்டியாக மோதிக்கொண்டதில் இளைஞர் பலத்த காயமடைந்தார். இது தொடர்பாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
குரும்பூர் அருகேயுள்ள சோனகன்விளை வேதக்கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார்(31). இவர், சென்னையில் வாடகை கார் தொழில் செய்து வருகிறார். இவரது நண்பர் ஒருவர் திருமண நிச்சயத்தார்த்த நிகழ்ச்சிக்காக ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் வியாழக்கிழமை மாலை, தனது நண்பர்களான சாமிநாதன், குருநாதமூர்த்தி, ராமஜெயம் ஆகியோருடன் காரில் சென்று குளத்தில் குளித்துவிட்டு நீல்புரம் சாலை வழியாக ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது, வழியில் நிறுத்தப்பட்டிருந்த சுமை ஆட்டோவை ஓரமாக விடுமாறு ராஜ்குமார் தரப்பு கூறினராம். இதில் சுமை ஆட்டோவில் இருந்த நத்தகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன், ரமேஷ், சுடலைமணி, செல்வன் ஆகியோருக்கும், ராஜ்குமார் தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். அங்கிருந்தவர்கள் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
எனினும், ராஜ்குமார் தரப்பினர் சோனகன்விளை பஜாருக்கு வந்த நிலையில், அங்கு வந்த மகேந்திரன் தரப்பினர் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனராம். இச்சம்பவத்தில் சாமிநாதன் தாக்கப்பட்டதுடன், கார் கண்ணாடியும் உடைக்கப்பட்டதாம். இதில், பலத்த காயமடைந்த சாமிநாதன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின்பேரில் குரும்பூர் போலீஸார் வழக்குப்பதிந்து செல்வத்தை கைது செய்தனர். மகேந்திரன் உள்பட 3 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.