தூத்துக்குடி வஉசி துறைமுகம் நிகழாண்டில் 7 லட்சம் சரக்குப் பெட்டகங்களை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து துறைமுக பொறுப்புக் கழக தலைவர் தா.கி. ராமச்சந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்னிந்தியாவின் பொருளாதார இயந்திரமாக செயல்பட்டு வரும் தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகம், கடந்த நிதியாண்டு கையாண்ட அளவான 6.97 லட்சம் சரக்குப் பெட்டகங்களை விட அதிகளவில் நிகழ் நிதியாண்டில் கடந்த 13 ஆம் தேதி வரை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது. இந்தச் சாதனையானது நிகழ் நிதியாண்டில் 18 நாள்களுக்கு முன்பாகவே நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த நிதியாண்டு கையாண்ட சரக்குப் பெட்டகங்களை ஒப்பிடுகையில் மார்ச் 15 ஆம் தேதி வரை வஉசி துறைமுகம் 7.03 லட்சம் சரக்குப் பெட்டகங்களை கையாண்டு 6.44 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்திய பெருந்துறைமுகங்களில் சரக்குப் பெட்டகம் கையாளுவதில் வஉசி துறைமுகம் 3 ஆவது இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சாதனையைப் படைக்க காரணமாக இருந்த அனைத்து சரக்குப் பெட்டக முனையத்தின் இயக்குபவர்கள், துறைமுக உபயோகிப்பாளர்கள், கப்பல் முகவர்கள், அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மத்திய கப்பல் துறை அமைச்சகம் 2018-19 ஆம் நிதியாண்டு நிர்ணயித்துள்ள 7.67 லட்சம் சரக்குப் பெட்டகங்களை கையாளுவதற்கு அனைவரும் அயராது உழைக்க வேண்டும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.