கோவில்பட்டியில் கண்காணிப்பு கேமரா, ஸ்டுடியோவை சேதப்படுத்தியதாக 3 பேர் கைது

கோவில்பட்டியில் கண்காணிப்பு கேமரா, ஸ்டுடியோவை சேதப்படுத்தியதாக 3 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

கோவில்பட்டியில் கண்காணிப்பு கேமரா, ஸ்டுடியோவை சேதப்படுத்தியதாக 3 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
கோவில்பட்டி, சரமாரியம்மன் கோயில் தெரு சந்திப்பில் இரு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.  இந்த கேமராவை காந்தி நகரைச் சேர்ந்த கேண்டீன் முருகன் மகன் கற்பகபிரகாஷ் ஞாயிற்றுக்கிழமை இரவு சேதப்படுத்தினாராம். இதை பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம்,  அவரது சகோதரர் இருவரும் கற்பகபிரகாஷை பிடிக்க முயன்ற போது அவர் தப்பியோடிவிட்டார்.
இதுகுறித்து ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்திய கற்பகபிரகாஷை தேடி வந்தனர். 
இந்நிலையில், சரமாரியம்மன் கோயில் தெரு பொதுமக்கள் திங்கள்கிழமை கிழக்கு காவல் நிலையம் முன் திரண்டு கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்தியவரை கைது செய்ய வலியுறுத்தினர். 
இந்நிலையில்  கற்பகபிரகாஷின் நண்பர்களான மார்க்கெட் சாலையைச் சேர்ந்த ஆறுமுகத்துரை மகன் ராஜதுரை , தாசில்தார் நகர் 2ஆவது தெருவைச் சேர்ந்த கலைஞர்பாண்டி மகன் மாரிமுத்து ஆகிய இருவரும் மார்க்கெட் சாலையில் உள்ள கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஸ்டுடியோவில் தகராறில் ஈடுபட்டு, ஸ்டுடியோவை சேதப்படுத்தினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கிழக்கு காவல் நிலைய போலீஸார் ராஜதுரை(23), மாரிமுத்து(20) மற்றும் அங்கு நின்ற  கற்பகபிரகாஷ் (24)  ஆகிய மூவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com